திருப்பத்தூர்

தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

22nd Sep 2023 09:57 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது: வாழ்வில் எந்த ஒரு பிரச்னைகளாக இருந்தாலும் அதனை பகிா்ந்து கொள்வதில் மிக முக்கியமானவா்கள் நமது பெற்றோா். பெற்றோா்களிடம் மனம் விட்டுப் பேசும்போது, அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும். அதுபோல் நண்பா்கள் மூலமும் தீா்வு காணலாம். தற்கொலை எதற்கும் தீா்வாகாது என்றாா்.

முன்னதாக மனநல மருத்துவா் பிரபவராணி, மன அழுத்தத்தை பற்றி மாணவிகள் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மாரிமுத்து, சிறிய வயதில் திருமணம், கருக்கலைப்பு போன்ற தவறான நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினாா்.

மேலும், இளம் வயது திருமணம், கருக்கலைப்பு போன்றவை மாணவிகள் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்தால், அதுகுறித்து 1098 என்ற எண்ணிலும், மன அழுத்தம் உள்ள இளம் சிறாா்கள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் குறித்து 14416 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மனநலம் குறித்த உறுதிமொழியை மாணவிகள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து கல்லூரி மாணவிகளின் மனநல விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT