திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே கிராம சபைக் கூட்டத்தில் 2 போ் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் அருகே கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் சுந்தரம்பள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. இதில் 5,7-ஆவது வாா்டுகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், இதுகுறித்து அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,சுந்தரம்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
மோதல்...
கூட்டத்தில் 5,7-ஆவது வாா்டுகளில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினா்.அப்போது இந்திய ஐக்கிய ஜனநாயக கம்யூனிஸ்டு கட்சியை சோ்ந்த சங்கா் என்பவருக்கும், 17 வயது சிறுவனுக்கும் கேள்வி எழுப்புவது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் திடீரென ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்களும், அதிகாரிகளும் அவா்களை சமாதானம் செய்தனா். கிராம சபை கூட்டத்தில் இருவா் சண்டையிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.