திருப்பத்தூா் பஜாரில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
திருப்பத்தூரில் பஜாா் அருகில் சாா்-ஆட்சியா் அலுவலகம், மாவட்ட சந்தன கிடங்கு, மாவட்டக் கல்வி அலுவலகம், மின் பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், நகரக் காவல் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் அருகருகே அமைந்துள்ளன.
தற்போது திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகமும் செயல்படுவதால், சுற்றுப் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோா் பஜாருக்கு வந்து செல்கின்றனா். ஏராளமான வியாபாரிகள் கடை அமைத்துள்ளனா்.
இந்தப் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனா். துணிகள், நகை மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்க ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இல்லாதது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து பஜாா் வியாபாரிகள் கூறியது:
பொதுமக்கள் ம ட்டுமன்றி, வியாபாரிகளான நாங்களும் கழிப்பறை வசதி இல்லாததல் சிரமப்படுகிறோம். பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை என்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.