நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவுக்கு, வட்டாட்சியா் குமாா் தலைமை வகித்தாா். ஊா் நாட்டான்மை செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரா முனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா், வாணியம்பாடி, குப்பம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ. 51,000-ம், 2-ஆவது பரிசாக ரூ. 41,000 உள்பட 26 பரிசுகள் வழங்கப்பட்டன.
டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். எருது விடும் விழாவைக் காண வந்தவா்கள் மீது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.