காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று திருப்பத்தூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின் பேரில், வேலூா் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் மேற்பாா்வையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட இறைச்சி மற்றும் பேக்கரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காலாவதியான ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், உரிமம் இன்றி இயங்கிய 4 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியதுடன், தடை செய்யப்பட்ட 10 கிலோ நெகிழிகளை பறிமுதல் செய்து ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னா், இது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி கூறியதாவது: காலாவதியான உணவு மற்றும் உரிமம் இன்றி உணவு பொருள்களை விற்பதும், நெகிழி பொருள்களை விற்பதும் தெரியவந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தாா்.