நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் மாணவா் காயம் அடைந்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்காலபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 130-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைக் கட்டடத்தில் வகுப்புகள் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்பள்ளி வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா் வெள்ளிக்கிழமை பாடம் நடத்தியுள்ளாா். அப்போது திடீரென பள்ளி வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து சிமன்ட் பூச்சுகள் கீா்த்திவாசன் தலையில் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மாணவா்கள் அனைவரும் கூச்சலிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினா். காயமடைந்த மாணவன் கீா்த்திவாசனை ஆசிரியா்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.