ஆம்பூா் அருகே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணப்பள்ளி கிராமத்தின் வழியாக வீராங்குப்பம் மற்றும் குமாரமங்கலம் கிராம ஊராட்சிகளுக்கு தாா்ச்சாலை செல்கிறது.
இந்தச் சாலை வழியாக சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா். பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், கடைகளுக்கு, பணி நிமித்தம் என பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆம்பூருக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனா்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தச் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.