ஆம்பூா் அருகே திருமணம் செய்யப்பட்டதாக 14 வயது சிறுமியை சமூக நலத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மாதனூா் ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கும், வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணமான இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமியின் கிராமத்துக்கு வந்துள்ளனா்.
இதுகுறித்து வேலூா் சமூக நலத் துறைக்குச் சென்ற புகாரின் பேரில், சமூக நல அலுவலா் ராஜகுமாரி மற்றும் உமா்ஆபாத் போலீஸாா், அந்தக் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை போலீஸாா் தேடி வருகின்றனா்.