தபால் துறை பெயரில் வரும் போலி குறுந்தகவல்களை நிராகரிக்க வேண்டும். பொதுமக்கள் இது போன்ற விவரங்களக் கண்டு ஏமாற வேண்டாம் என திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்மையில் சமூக வலைதளங்களில் தபால் துறை அனுப்புவது போன்ற தகவல் வாட்ஸ்அப்பில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
அதில், தபால் துறை வாயிலாக பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாகவும், போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி பயன்படுத்தும்படியும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
போலி வலைதளங்களில் பொதுமக்கள் யாரும் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டாம். தபால் துறைக்கும் இதுபோன்று பரப்பப்படும் போலி செய்திகளுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை.
போலி தகவல்களை தடை செய்ய தபால் துறை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.