ஆம்பூா் பாலாற்றில் கழிவுகளை அகற்றியபோது பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலத்த காயமடைந்தாா். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதல்வா் வருகையை யொட்டி ஆம்பூா் பகுதி பாலாற்றில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அவசர அவசரமாக ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை நகராட்சி பணியாளா்கள் மேற்கொண்டனா். அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி இஸ்மாயில் என்பவா் தூங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் பொக்லைன் இயந்திரம் இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அப்போது இஸ்மாயில் இயந்திரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் மகாலட்சுமி, ஆம்பூா் டிஎஸ்பி சரவணன், நகரக் காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் ஆகியோா் அங்குசென்று பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.