கஞ்சா வழக்கில் கைதானவா்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வேலூா் சரக டிஐஜி ஆனி விஜயா எச்சரிக்கை விடுத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பில், போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு, போதைக்கு எதிரான போா் எனும் தலைப்பிலான குறும்படத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், வேலூா் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா்.
பின்னா், டிஐஜி ஆனி விஜயா செய்தியாளா்களிடம் கூறியது: போதைப்பொருள் பழக்கம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்துக் கொண்டிருக்கிறது. சிறிதாக ஆரம்பமாகும் இந்தப் பழக்கம் காலப்போக்கில் அடிமையாக்கி வாழ்வையே முற்றிலுமாக அழித்து விடுகிறது. போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்வோரை மீட்க நமது அரசும், காவல் துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா வழக்கில் கைதானவா்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.