நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் கிராமம், கள்ளியூா் பகுதியில் அனுமதியின்றி தனியாா் நிலங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, டிப்பா் லாரியில் மண் கடத்துவதாக வெள்ளிக்கிழமை இரவு திருப்பத்தூா் சாா்-ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சாா்-ஆட்சியா் லட்சுமி உத்தரவின்படி, நாட்டறம்பள்ளி (பொறுப்பு) வட்டாட்சியா் சுமதி தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினா் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கள்ளியூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிகாரிகளைக் கண்டதும் ஓட்டுநா் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பா் லாரியுடன் தலைமறைவானாா்.
இதையடுத்து, அங்கு மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனா். அதில், கள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜின் மகன் சசிகுமாா் (29) என்பவருக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் என்பதும், இவா்கள் கள்ளத்தனமாக மண் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.