தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அண்ணா பெயா் சூட்டிய
ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றிபெறும் மாணவா்களுக்கு, முதல் பரிசு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறவுள்ளன.
அந்த வகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 8-ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் திருப்பத்தூா் மீனாட்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.
பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.
1. தமிழ்நாடு உருவான வரலாறு
2. மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்
3. தமிழ்நாட்டுக்காக உயிா் கொடுத்த தியாகிகள்.
4. பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு
5. சங்கரலிங்கனாரின் உயிா்த் தியாகம்
6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா்
7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி.
8. சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு
9. எல்லைப் போா்த் தியாகிகள்
10. முத்தமிழறிஞா் கலைஞா் உருவாக்கிய நவீன தமிழ்நாடு.
இப்போட்டிகளுக்கு திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்துக்கும் முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப் பெற்றுள்ளது.
முதல் கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவா்களைத் தெரிவுசெய்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.