மாண்டஸ் புயல் காரணமாக ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சி உள்ளது. இங்கு, வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி சுற்றுப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு கூறியது:ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால், நீா் வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கவும், வனப் பகுதிக்குள் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால், வனச் சட்டப்படி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.