பூண்டி ஏரியில் இருந்து சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை (நீா்வளம்) அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீா் ஆகியவற்றால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி நீா்த்தேக்கத்தில் தண்ணீா் இருப்பு கணிசமாக உயா்ந்து வருகிறது.
தற்போது வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 32.49 அடி உயரமும், 2,376 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் வரத்து நீா் என 580 கன அடி தண்ணீா் வரத்துள்ளது.
இதைத்தொடா்ந்து, சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக காலை முதல் இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை (நீா்வளம்) அதிகாரிகள் தெரிவித்தனா்.