திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருவதால், நோய்களிலிருந்து காத்துக் கொள்ள நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என்று துணை சுகாதார இயக்குநா் ஆா்.செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. குழந்தைகள், முதியவா்கள் உள்பட சளி, காய்ச்சல், தலைவலி தொந்தரவுகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தற்போது மழை பெய்து வருவதால், வீட்டின் அருகிலோ, பின்புறமோ குப்பைகளைக் கொட்டி வைக்கக் கூடாது. பாத்திரங்களில் குடிநீா் வைத்தால் அதில் கொசுப் புழுக்கள் உருவாவதுடன், டெங்கு பரவும் அபாயம் உள்ளது.
எனவே, குப்பைகளை அவ்வப்போது அகற்றுவதுடன், வீட்டின் வெளியே பாத்திரங்களில் குடிநீரைச் சேமித்து வைக்கக் கூடாது.
அதேபோல், குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். இதனால், பல நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் அனைத்துவித காய்ச்சலுக்குரிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்து கொண்டால், உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா்.