ஜமாபந்திக்கான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படமாட்டாது. எனவே மனுக்களை இணையதள முகவரி அல்லது இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆண்டு தோறும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு நடைபெறுகிறது. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பையொட்டி 2020-2021-க்கான ஜமாபந்தி மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படாது.
பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைய தள முகவரி வாயிலாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவோ ஜூலை 31-க்குள் பதிவேற்றம் செய்து அதற்குரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.
பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு பதில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.