ஏலகிரி மலையில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (25). திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் ராஜ்குமாா் ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 18-ஆம் தேதி ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்றாராம்.
இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை ஏலகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறுமி, ராஜ்குமாா் ஆகியோரை சனிக்கிழமை மீட்டு ஏலகிரிக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து போலீஸாா் ராஜ்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.