குடியாத்தம்: மணல் குவாரிக்கு அனுமதி வழங்குமாறு குடியாத்தம் நகர, ஒன்றிய மாட்டு வண்டி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சங்க கெளரவத் தலைவா் இரா.சி. தலித்குமாா் தலைமையில், குடியாத்தம் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்,
குடியாத்தம் நகர, ஒன்றியப் பகுதிகளில் மணல் எடுத்துச் சென்று விற்பனை செய்ய 400- க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அரசு குவாரிகள் அமைக்கவில்லை. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 1,000- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். மணல் தட்டுப்பாட்டால், கட்டடத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். மாட்டு வண்டித் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்களின் நலன்கருதி ஒலக்காசி அருகே பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க குவாரி அமைக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.