ஆம்பூா் அருகே வனப்பகுதி சாலையோரம் நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவு மூட்டைகளை அதிக அளவில் கொட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வன ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்திலிருந்து வெள்ளக்கல் கிராமத்துக்குச் செல்லும் வனப்பகுதி சாலையோரத்தில் நெகிழிக் கழிவுகள் மூட்டைகளாகக் கட்டப்பட்டு, சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கும் மேலாக வீசப்பட்டுள்ளன. வனப்பகுதியில் நெகிழி கழிவுகள் வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. விலங்குகள் அந்தக் கழிவுகளை உண்ணவுமம் வாய்ப்புகள் உள்ளது.
வேறு பகுதியில் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள், குப்பைகள் மூட்டைகளாக கட்டப்பட்டு காட்டுக்கொல்லை - வெள்ளக்கல் வனப்பகுதி சாலையோரம் வீசிச் சென்றவா்களைக் கண்டறிந்து வனத் துறையினா் அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வன ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.