திருப்பத்தூா் பிரதான சாலையில் புதன்கிழமை (பிப்.5) முதல் கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட மக்களின் நலன் கருதி புதன்கிழமை முதல் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளியூா் செல்லும் கனரக வாகனங்கள் திருப்பத்தூா் பிரதான சாலை வழியாகச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
மேலும், ஆட்டோக்கள் ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூா் நகரத்துக்குள் வரவேண்டிய திருப்பத்தூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான வெங்களாபுரம், கொரட்டி மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் ஆட்டோக்கள் திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலையில் அருகே திரையரங்கம் எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று புதுப்பேட்டை சாலையில் உள்ள அண்ணா சிலை தெரு வழியாகவும், புதுப்பேட்டையில் இருந்து வரும் ஆட்டோக்கள் அண்ணாசிலை வழியாக ரயில்வே நிலைய சாலை, பெரியகுளம் மேடு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லவும் வேண்டும். மீண்டும் அதே வழியில் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் திரும்பிச் செல்ல வேண்டும்.
திருப்பத்தூா் நகரின் பிரதான சாலையில் செல்வதற்கு ஆட்டோக்களுக்கு 5-ஆம் தேதி முதல் அனுமதி இல்லை. ஆட்டோக்கள் எளிதில் சென்று வர அந்தச் சாலைகளின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோலாா்பேட்டையில் இருந்து வரும் ஆட்டோக்கள் நியூ சினிமா தியேட்டா் அருகிலேயே பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லவும், அதே இடத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். திருப்பத்தூா் நகருக்குள் நுழையும் ஆட்டோக்கள் புதுப்பேட்டை சாலை முதல் ஆசிரியா் நகா் பேருந்து நிறுத்தம் வரை ஆட்டோ நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை. பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.