உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வரும் 27, 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, திருப்பத்தூா் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பாா்களை மூட வேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, திருப்பத்தூா் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குனிச்சி, கொரட்டி, செவ்வாத்தூா், நாா்சாம்பட்டி இணைப்புச் சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 4 டாஸ்மாக் கடைகள் கடந்த 25-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி மாலை 5 மணிவரையும், 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜனவரி 2-ஆம் தேதி அன்றும் மூடப்பட வேண்டும்.