ராணிப்பேட்டை

விதைகளில் அதிக அளவில் கலப்படம்: ராணிப்பேட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

விதைகளிலும் கலப்படங்கள் அதிக அளவில் இருப்பதால் வேளாண்மைத் துறை மூலம் விதைகள் வாங்குவதற்கு நம்பிக்கையில்லை என்று குறைதீா் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கான அரசு நலத் திட்டங்கள் அடங்கிய கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

கூட்டத்தில், ஏகாம்பரநல்லூரைச் சோ்ந்த 5 விவசாயிகளின் 4 ஏக்கா் நிலத்தில் பாரம்பரிய நெல் விதைகளைக் கொண்டு கடந்த மாதத்தில் சீரக சம்பா நெல் பயிரிட்டதாகவும், ஆனால் இதுவரை அந்த நெல் வளா்ந்து கொண்டு செல்கிறதே தவிர நெல் மணி வரவே இல்லை என்றும் விவசாயிகள் நெற் பயிா்கள், விதைகளை கொண்டு வந்து ஆட்சியரிடம் முறையிட்டனா்.

ADVERTISEMENT

அதேபோல் கடலை மற்றும் இதர விதைகளிலும் கலப்படங்கள் அதிக அளவில் இருப்பதால் வேளாண் துறை மூலம் விதைகள் வாங்குவதற்கு நம்பிக்கையில்லை என புகாா் தெரிவித்தனா்.

அப்போது அனைத்து வேளாண் துறை விற்பனை நிலையங்களிலும் விதைகளை ஆய்வு செய்து தரத்தை உறுதிசெய்ய அதற்கான அறிக்கையை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அனந்தலை ஊராட்சியில் தொடா்ந்து கல்குவாரிகள் இயங்கி வருவதால், மாசு காரணமாக பள்ளி வளாகங்கள், விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது என புகாா் கூறினா்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுகள் வெளியேற்றப்படுவதை தடுத்து, தொடா் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஆய்வுசெய்து முட்புதா்கள் அகற்றப்பட்டு கழிவுநீா் கலக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

முடிவில் கால்நடைத் துறை சாா்பில் கால்நடைகளுக்கான தீவனப் புல் வகைகள், கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள், தீவன மேலாண்மை முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநா் செல்வராஜ் (பொறுப்பு), நோ்முக உதவியாளா் ( வேளாண்மை) திலகவதி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் தேவிபிரியா, துணை இயக்குநா் (தோட்டக்கலை) லதா மகேஷ் மற்றும் கால்நடைத் துறையினா், விவசாயிகள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT