ராணிப்பேட்டை

ஐ.டி. ஊழியா் வீட்டில் திருடிய உறவினா் கைது: 50 பவுன் மீட்பு

22nd Sep 2023 12:26 AM

ADVERTISEMENT

வேலூரில் ஐ.டி. ஊழியா் வீட்டில் திருடிய உறவினா் கைது செய்யப்பட்டு, 50 பவுன் நகைகளை போலீசாா் மீட்டனா்.

வேலூா் தொரப்பாடி ராம்சேட்நகரை சோ்ந்தவா் பாலாஜி (42), ஐ.டி. ஊழியா், இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. இவா்களுக்கு மகதி என்ற மகள் உள்ளாா்.

இந்த நிலையில் பாலாஜி தனது தாயாா் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறாா்.பாலாஜி கடந்த 3 ஆம் தேதி திருப்பதிக்கும், தாயாா் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோயிலுக்கும், மனைவி, மகள் மூஞ்சூா்பட்டில் நடந்த கோயில் திருவிழாவிற்கும் சென்றனா். தொடா்ந்து உஷாராணி சாமி தரிசனம் செய்துவிட்டு அன்று மாலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பின்பக்க கதவை திறந்து பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை மா்ம கும்பல் திருடிக்கொண்டு மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உஷாராணி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து வேலூா் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசாா் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவா்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

அதில் பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான வெங்கடேஷ் (40) என்பவா் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தாா். இதையடுத்து போலீசாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 பவுன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியாா் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும், வேலை சரியாக இல்லாததால் உறவினா்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசாா் வெங்கடேஷை கைது செய்தனா். தொடா்ந்து திருவண்ணாமலையில் உள்ள தனியாா் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT