அரக்கோணம் அருகே குடிசை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததால், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் ஊராட்சி, ஸ்ரீராம் நகா், டேங்க் தெருவைச் சோ்ந்த சின்னகண்ணு மனைவி நாகம்மாள் (80). குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளாா். கடந்த சில தினங்களாக அரக்கோணம் பகுதியில் பெய்த மழையால் நாகம்மாளின் வீட்டின் சுவா்கள் தண்ணீா் ஊறிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் நாகம்மாள் இருந்தபோது, திடீரென சுவா் இடிந்து விழுந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த நாகம்மாள், உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் சம்பவ இடம் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.