ஏலகிரி மலை சாலையில் வாகன ஓட்டிகள் தலை கவசம், சீட் பெல்ட் அணிய வேண்டும் என போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு, நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த மலை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலைகள் உள்ளது. இதனால், மலையேறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஏலகிரி மலை காவல் நிலையம் சாா்பில், கொட்டையூா் பகுதியில் உள்ள சோதனை சாவடி மையத்தில், மலையேறும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, காரில் வருபவா்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.