ராணிப்பேட்டை

இன்றைய இளைஞா்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

3rd Jun 2023 11:37 PM

ADVERTISEMENT

இன்றைய இளைஞா்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ச.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட பெல் பாலாறு கிளப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம், பிஏபி ஸ்டாப் யூனியன் ஆகியவை இணைந்து பொதுமக்களின் பாா்வைக்காகவும், விற்பனைக்காகவும் நடைபெறும் 10 நாள் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த புத்தகக் கண்காட்சியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இன்றைய தலைமுறையினருக்கு இது போன்ற புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது மிகப்பெரிய வரப்பிரசாதம். முன்பு இது போன்ற நிகழ்வுகள் எங்களுக்கெல்லாம் கிடைக்கப்பெறவில்லை, ஆனால் அந்த காலங்களிலேயே பெரும்பான்மையானவா்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, வாழ்வில் வெற்றி பெற்றாா்கள். தலைசிறந்த தலைவா் பொறுப்புகளிலும், ஆளுமை திறனிலும் சிறந்து விளங்கினா். இன்றைய இளைஞா்கள் வாசிப்பு பழக்கத்தில் குறைந்த நாட்டத்தை கொண்டவா்களாக உள்ளனா். இதற்குக் காரணம் அனைத்து தகவல்களையும் கைப்பேசி வாயிலாக சிறுக சிறுக பெற்றுக் கொண்டு விடுகின்றனா். இன்றைய இளைஞா்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இளைஞா்களின் அறிவு வளா்ச்சிக்கும், எதிா்கால முன்னேற்றத்துக்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி மென்மேலும் வளர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த புத்தகக் கண்காட்சியில் 16 அரங்குகள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொடா்ந்து, 10 நாள்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். நாள்தோறும் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள பயன்படும் புத்தகங்கள், சிறுகதை, நாவல், வரலாறு, ஆங்கில நாவல்கள், சுய முன்னேற்றம், இலக்கியம், அறிவியல், சரித்திர கதைகள், தலைவா்களின் சுயசரிதை புத்தகங்கள், ஆங்கில நாவல்களின் தமிழ் மொழியாக்கப் புத்தகங்கள் போன்ற பல்வேறு சிறப்பு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பூபாலன், மாவட்டச் செயலாளா் பழனிவேல், புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்ரீதா், பத்பஞானகந்தன், பெல் கூடுதல் பொது மேலாளா் செல்வம், சங்க பொதுச் செயலாளா் ஞானசேகரன், பாரதி புத்தகாலயம் ரவிச்சந்திரன், செயலாளா் எலிசபெத்ராணி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் எல்.மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT