ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் அதிக பரப்பளவு கொண்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28- ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து பாரதி நகர் பகுதியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையம் (ஐவிபிஎம் ) வளாகத்தில் ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ரூ.12.02 கோடி மாவட்ட காவல் அலுவலகமும் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகம் ரூ.12.02 கோடி திட்ட மதிப்பீட்டில் கடந்த 7.7.2021 அன்று துவங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய மாவட்ட காவல் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார்.
இதையடுத்து புதிய மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, மாவட்ட எஸ்பி. டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர். இதில் ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஷ் யாதவ் அசோக், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.