குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் எஸ்.வளா்மதி உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் எஸ்.வளா்மதி தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு, பொது நலன் என 330 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை மனுதாரா்களுக்கு விளக்கவும் வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மனுக்கள் மீது துறை சாா்ந்த அலுவலா்கள் 15 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழிக்கும் வகையில் மனுக்களுக்கு பதில் அளிக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வ.மீனாட்சி சுந்தரம், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, உதவி ஆணையா் (கலால்) சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் ஆதி திராவிடா் நலத் துறை அலுவலா் (பொ) மணிமேகலை மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.