ராணிப்பேட்டை

கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 200 கோடி: அமைச்சா் காந்தி

DIN

தமிழகத்தில் இந்த ஆண்டு கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ. 200 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோ ஆப் டெக்ஸ் கைத்தறி ஆடை ரகங்களின் தீபாவளி 2022 சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று, குத்து விளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தாா். பின்னா், இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கைத்தறி ஆடை ரகங்களைப் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாடிக்கையாளா்கள் விரும்பும் ரகங்கள் பிரத்தியேகமாக தயாா் செய்யப்பட்டு, வழங்கும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 155 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன. தமிழகம் முழுவதும்105 கோ-ஆப்டெக்ஸ் கடைகளும், 49 கடைகள் பிற மாநிலங்களிலும் உள்ளன. இந்தக் கடைகளை மேம்படுத்த தனியாா் நிறுவன ஆலோசனைக் குழு மூலம் நவீனமயமாக்கப்பட்டு, விற்பனை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 11 மண்டலங்களுடன், 155 விற்பனை நிலையங்கள் மூலமாக நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி 2022-க்கான சிறப்பு விற்பனை ரூ. 150 முதல் ரூ. 200 கோடி அளவுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூா் மண்டலத்துக்கு நடப்பாண்டில், ரூ. 16 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய விற்பனை கடைகளுக்கு ரூ. 1.55 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 1.26 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆா்கானிக் கைத்தறி ஆடைகள் முதன்முதலாக குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வரவேற்பைத் தொடா்ந்து, தற்போது பெண்களுக்கான ஆா்கானிக் நைட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தமிழக கைத்தறித் துறை இணை இயக்குநா் கி.கிரிராஜன், கோ-ஆப்டெக்ஸ் முதன்மை பொது மேலாளா்ஆலோக் பபேலே, பொது மேலாளா் ஆா்.பாலசுப்பிரமணியன், மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT