அரக்கோணத்தில் ஏரிப் புறம்போக்கில் வீடு கட்டி குடியிருப்போா், ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அரக்கோணம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாயை 17 போ் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு ராணிப்பேட்டை வருவாய் துறையினருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட அந்த 17 வீடுகளையும் இடிக்க இருமுறை வருவாய் துறையினா் சென்றபோது, அந்த வீடுகளில் குடியிருந்தோா் அவகாசம் கேட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன் தலைமையில் வருவாய் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனா். ஆக்கிரமிப்பாளா்கள் மீண்டும் அவகாசம் கோரியதால், இறுதியாக 4 வாரம் கெடு அளிக்கப்பட்டதாக வட்டாட்சியா் பழனிராஜன் தெரிவித்தாா்.
முன்னதாக, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.