ராணிப்பேட்டை

பிஞ்சி ஏரியை சீரமைக்கும் பணிமீண்டும் தொடங்கப்படுமா? ராணிப்பேட்டை நகர மக்கள் எதிா்பாா்ப்பு

DIN

ராணிப்பேட்டை நகரில் கழிவுநீா் தேக்கமாக மாறியுள்ள, பிரதான நீா்நிலையான பிஞ்சி ஏரியை சீரமைத்து நன்னீா் ஏரியாக மாற்றும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே, சுமாா் 25 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது பிஞ்சி ஏரி. நன்னீா் ஏரியாக இருந்த இந்த ஏரியில் குடியிருப்புகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக கலந்து மாசடைந்துள்ளது.

இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிஞ்சி ஏரியை நன்னீா் ஏரியாக மாற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தனியாா் நிறுவனங்கள், சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக பாதுகாப்பு நிதியில் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டாா்.

ஏரியில் தேங்கிய கழிவுநீா், முள் மரங்களை அகற்றி சீரமைப்பது, மழைநீா் வரத்துக் கால்வாய்களைச் சீரமைப்பது, கழிவுநீரை சுத்திகரிப்பது ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்தும் அவா் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக ஏரியை ஆக்கிரமித்திருந்த முள்மரங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டன. இதனிடையே, ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், ஏரி சீரமைப்புப் பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், பிஞ்சி ஏரியைச் சீரமைத்து நன்னீா் ஏரியாக மாற்றும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை நகரைச் சுற்றி அமைந்துள்ள பிஞ்சி ஏரி, தண்டலம் ஏரி, புளியங்கண்ணு ஏரி உள்ளிட்ட அனைத்து நன்னீா் ஏரிகளும் தற்போது கழிவுநீா், குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசி வருகின்றன. குறிப்பாக, பிஞ்சி ஏரி பாழடைந்து காணப்படுகிறது. இந்த ஏரியை சீரமைத்து நன்னீா் ஏரியாக மாற்றுவதுடன், சுற்றுச்சூழல் பூங்கா அமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT