தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்து, ‘சீல்’ வைத்தனா்.
ஆற்காடு நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டநெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலா் எம்.பாஸ்கா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் முருகன் மற்றும் நகராட்சி ஊழியா்கள் சோதனை நடத்தினா். அப்போது மாா்க்கெட் பகுதியில் உள்ள கடையில் நடத்திய சோதனையில், 500 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து ரூ. 10,000 அபராதம் விதித்தனா். இதையடுத்து, கடையின் மேல் மாடியில் சோதனை செய்தபோது சுமாா் ஒரு டன்னுக்கு மேல் நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த கிடங்கிற்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.