ஆற்காடு நகராட்சியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கான சமையல் கூடம் கூடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் ரூ. 23.60 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சியில் உள்ள 6 தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு
முதல்வா் அறிவித்த காலை உணவு வழங்கும் திட்டத்துக்கான உணவு தயாரிக்கும் சமையல் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இதை ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா். இந்த சமையல் கூடம் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இங்கிருந்து ஆற்காடு நகராட்சியில் உள்ள ஆறு தொடக்கப் பள்ளிகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுகள் தயாரித்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்படவுள்ளது. காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கட்டடப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும், தரமாக இருக்க வேண்டும், பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, ஆற்காடு நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், இளநிலைப் பொறியாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து ஆற்காடு சித்தி விநாயகா் கோயில் தெருவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், தொல்லியல் துறை அலுவலா் ஆயிஷா பேகம், சிற்றெழுத்தா் ரகோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.