ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த ஆயிலம் ஊராட்சியில் சமூகப் பாதுகாப்பு மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கூட்டம் ஆயிலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் பிரபாவதி ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழந்தைகள் அலகு சமூகப் பணியாளா் பாா்த்தீபன், ரத்தினகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் எஸ்.சேகா், கே.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை, குழந்தை திருமணம், குழந்தைத் தொழிலாளா்கள் ஒழிப்பு, குழந்தைகளுக்கான சமூகப் பாதுகாப்பு, காவல் துறை செயலி பதிவிறக்கும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினா்.
மேலும், மூன்று மாதத்துக்கு ஒருமுறை விழிப்புணா்வுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், ஆயிலம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜெ.முருகேசன், ஊராட்சி செயலாளா் ம.சரவணன், அங்கன்வாடிப் பணியாளா் மகாலட்சுமி, பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.