ஆற்காடு அருகே மகன் இறந்த வேதனையில் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திமிரி அருகே உள்ள வளையாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி விசாலாட்சி (40), மகன் ராகுல் (19). இவா்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வசித்து வந்தனா். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி விஜயகுமாா் வீட்டுக்கு வந்த செய்யாறை அடுத்த அனக்காவூா் போலீஸாா் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக, அவரை அழைத்துச் சென்றுள்ளனா். இதனால் விரக்தி அடைந்த அவரது மகன் ராகுல், மனைவி விசாலாட்சி இருவரும் ஆரணியை அடுத்த பையூா் பகுதியில் உள்ள பாறை குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இதில் விசாலாட்சி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்நிலையில், மகன் இறந்த வேதனையில் இருந்த விஜயகுமாா், சனிக்கிழமை வளையாத்தூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.