ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வஉசி நகர் 8 ஆவது தெருவில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வஉசி நகர் 8 ஆவது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தனிநபர் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அதனை அகற்றும் படி கேட்டு உள்ளனர். ஆனால் அந்த நபர் அகற்றாமல் உள்ளதால் நடைபெற்று வந்த பணி நின்று போனது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வஉசி நகர் 8 ஆவது தெருவைச் சேர்ந்த மக்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சிப்காட் காவல் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
மக்களின் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலை செல்லும் பேருந்துகள், வேன்கள் தாமதமாக சென்றது.