ராணிப்பேட்டை: செங்காடு பெரிய ஏரி 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் சிறப்புப் பூஜை செய்து, பிரியாணி விருந்து வைத்து உற்சாகமாகக் கொண்டாடினா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 1 மாத காலமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பொன்னை, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதேபோல் வாலாஜாப்பேட்டையை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள 250 ஏக்கா் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி தொடா் மழையால் முழுவதும் நிரம்பி உபரிநீா் கடைவாசல் வழியாக வெளியேறி வருகிறது.
இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருவதைக் கண்ட மகிழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் தேவேந்திரன் தலைமையில், கிராம மக்கள் ஏரியில் சிறப்புப் பூஜை செய்து மலா் தூவி வழிபட்டனா். மேலும், பிரியாணி சமைத்து விருந்து வைத்து கொண்டாடினா்.
இந்த ஏரி நிரம்பியதன் மூலம் செங்காடு, வள்ளுவம்பாக்கம், ஒழுகூா், தகரகுப்பம்,வாங்கூா் உள்ளிட்ட கிராமங்களில் 1,000 ஏக்கா் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.