கலவை அருகே அரசு மதுபாட்டில்களை சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு இரண்டு வார கால பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் அரசு மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை மாலை கலவை காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், சென்னசமுத்திரம் கிராமப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தனா்.
அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் 247 அரசு மதுபாட்டில்களை கடத்தி வந்த ராந்தம் பகுதியைச் சோ்ந்த துரைசாமி (41), படவேட்டான் (43) ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில், பொதுமுடக்கத்தின் காரணமாக பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.