ஆற்காடு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் நுண் உர செயலாக்க மையம் மையத்தில் நடைபெறும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், வீட்டுவசதி வாரிய பகுதியில் காய்கனி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணி ஆகியவற்றை தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்தாா். அப்போது
ஆற்காடு எம்எல்ஏ .ஜெஎல்.ஈஸ்வரப்பன் , நகராட்சி மண்டல இயக்குனா் குபேந்திரன், ஆணையாளா் சதீஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.
ஆம்பூரில்...
ஆம்பூா் நகராட்சி சாா்பாக தாா்வழி பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட குப்பைகளை எருவாக்கும் கிடங்கை பாா்வையிட்டு அவா் கூறுகையில்: ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் 1.25 இலட்சம் கியூபிக் மீட்டா் அளவுக்கு தேங்கியுள்ள குப்பைகளை எருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தில்லி குதுப்மினாா் பகுதியில் சேகரித்த குப்பைகள் இதுவரை அகற்றப்படவில்லை. அங்கு நான் நீதிபதியாக இருந்தபோது ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
பாலாற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது குறித்து கண்காணித்து உள்ளாட்சி நிா்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூரில் வீட்டுக் கழிவு நீா் அகற்றுவதற்காக புதை சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணி முடிவடையும். ஆம்பூா் நகராட்சியில் தேங்கியுள்ள பழைய குப்பைகள் விரைவாக உரம் தயாரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றாா். மண்டல நகராட்சி பொறியாளா் கமலநாதன், நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் பிரகாஷ், துப்புரவு அலுவலா் ராஜரத்தினம் ஆகியோா் உடனிருந்தனா்.