ஆற்காடு: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஆற்காட்டில் அதிமுகவினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தாஜ்புரா பகுதியில் ஒன்றியச் செயலாளா் என்.சாரதி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய அவை தலைவா் ஏ.எஸ்.மணி, துணைச் செயலாளா் எஸ்.ஆா்.சங்கா், பொதுக்குழு உறுப்பினா் தா.கு.கணேசன், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலாளா் சீனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் ஏ.இப்ராஹீம் கலிலுல்லா தலைமையில் கத்தியவாடி சாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர அவைத் தலைவா் தாடிபாபு , முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஷபீக் அஹமது, சோமசுந்தரம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளா் மஸ்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.