ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27,54 லட்சம் மதிப்பிலான இணைச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களையும், விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த 25 தன்னாா்வலா்களுக்கு நினைவுப்பரிசுகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினாா். மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் நூ.ஷே. முஹம்மது அஸ்லம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெங்கடரமணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.