ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய், சேய் மரணமடைந்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அர்ச்சனாவுக்கு ஞாயிறுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்படவே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதையடுத்து நள்ளிரவில் பிரசவித்த தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல், அறிந்து திரண்ட அர்ச்சனாவின் உறவினர்கள் இரவு பணியில் மருத்துவர் இல்லாததால், செவிலியர், ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால்தான் தாய், சேய் மரணமடைந்ததாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு இறந்த தாய், சேய் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து எம்எல்ஏ ஆர்.காந்தி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.