ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லை, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என 3 ஆக பிரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்து, நவம்பா் 28-ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தற்காலிக அலுவலகம், மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி மைய வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நகராட்சி அலுவலக வளாகத்திலும் செயல்பட்டு வருகின்றன.
ராணிப்பேட்டை பாரதி நகரில் 192 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் கட்ட ரூ. 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.இதில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகம் கட்ட ரூ. 118.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தாா்.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக அடிக்கல் நாட்டு விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி பங்கேற்று புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் அரக்கோணம் கோட்டம் மற்றும் சோளிங்கா், கலவை புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டங்கள் கட்ட ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு மாவட்ட மக்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டாா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத், மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சு. ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் ( சோளிங்கா்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கரலிங்கம் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
~ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உள்ளிட்டோா். ~ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக மாதிரி வடிவம்.