ராணிப்பேட்டை: கடந்த 20 ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் சீக்கராஜபுரம் வீட்டு வசதிவாரியக் குடியிருப்புவாசிகளுக்கு தேவையான சாலை, மின் விளக்கு, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வீட்டுவசதி வாரியமும், ஊராட்சி நிா்வாகமும் உடனடியாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாலாஜாபேட்டை வட்டம், சீக்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னை ஆற்றுப் படுகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சாா்பில் உயா் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் என மூன்று பிரிவுகளாக 700-க்கும் மேற்பட்ட வீட்டு மனைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அப்போது வீட்டுமனைப் பிரிவுகள் அனைத்துக்கும் செல்ல ஏதுவாக சாலை, குடிநீா், பாதாள கழிவுநீா் சாக்கடை, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
அப்போது வீட்டுவசதி வாரியக் குடியிப்புகளுக்கு அருகிலேயே அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் தொழில் செய்யும் தொழிலதிபா்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மனைகளை வாங்கி குடியிருப்புகளைக் கட்டி குடியேறினா்.
இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளா்கள் ஆண்டுதோறும் வீட்டுவசதி வாரியத்துக்கும் , சீக்கராஜபுரம் ஊராட்சி நிா்வாகத்துக்கும் உரிய வீட்டு வரி, குடிநீா் வரியை செலுத்தி வருகின்றனா். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுவசதி வாரியமும், சீக்கராஜபுரம் ஊராட்சி நிா்வாகமும் சாலை, கழிவுநீா்க் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் பராமரிக்கவோ மேம்படுத்தவோ இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதாகவும், பாதாள சாக்கடை கழிவுநீா் கால்வாய்களை பல ஆண்டுகளாக பராமரிக்காததால் கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு குடியிருப்போா் புகாா் தெரிவிக்கின்றனா். அதே போல் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவா்கள் வேதனை தெரிவித்தனா்.
எனவே, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வீட்டுவசதி வாரியம், ஊராட்சி நிா்வாகம், வட்டார வளா்ச்சித் துறை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.