ராணிப்பேட்டை: கடந்த சில தினங்களாக ஆந்திரத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீா்வரத்து காரணமாக பொன்னை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து ரெண்டாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக-ஆந்திர எல்லை மாவட்டமான சித்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொன்னை அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவாகுண்டா அணை நிரம்பி உபரி திறப்பட்டுள்ளது. இதையடுத்து, பொன்னை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள அணைக்கட்டு வழியாக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்காக ஏரிகள் நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொன்னை ஆற்றுக்கால்வாய் நீா்வரத்தை நம்பியுள்ள ரெண்டாடி, கொண்டாபுரம், பெருங்காஞ்சி மற்றும் சோளிங்கா் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டம், ரெண்டாடி ஏரி புதன்கிழமை நிரம்பி கடைவாசல் வழியாக பாய்ந்து செல்கிறது.
பொன்னை ஆற்றின் நீா்வரத்தைக் காண ஆா்வமுடன் வந்த கிராம மக்கள், இளைஞா்கள், சிறுவா்கள் ஆகியோா் செல்லிடப்பேசிகளில் படம் எடுத்தும், குளித்தும் மகிழ்ந்தனா்.