ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்கள் உதயமாகி சனிக்கிழமையுடன் (நவ. 28) ஓராண்டு நிறைவடைகிறது.
கடந்த 2019 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவின்போது, அரசின் நிா்வாக வசதிக்காக வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரைத் தலைமையிடங்களாகக் கொண்டு, தனி மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
அதன்படி, 2019 நவம்பா் 28-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களின் செயல்பாடுகளை முதல்வா் கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் முறைப்படி தொடங்கி வைத்தனா். இந்த இரு மாவட்டங்கள் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக அரங்கில் திருப்பத்தூா் மாவட்டம் உதயமான நாள் விழா, தமிழ் வளா்ச்சி அலுவலகம் திறப்பு, நூல்கள் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது.