நிவர் புயல் எச்சரிக்கையைத்தொடர்ந்து அரக்கோணத்திலிருந்து 6 குழுக்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை இன்று காலை கடலூருக்கு புறப்பட்டது.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தீவிரப் புயலாக கரையைக் கடக்கும பட்சத்தில் மணிக்கு 89 கி.மீ. முதல் 117 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளில் ஈடுபட கடலூர் மாவட்ட ஆட்சியரின் அழைப்பை ஏற்று அரக்கோணம் அருகே நகரி குப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தலா 20 பேர் கொண்ட 6 குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து கடலூருக்கு திங்கள்கிழமை காலை பேருந்துகளில் விரைந்தனர்.
இக்குழுவினர் தங்களுடன் ஆர்வமுள்ள பகுதிகளிலும் நீந்திச் செல்ல தேவையான, சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற தேவையான அதிநவீன கருவிகள் மற்றும் நீர்சூழ்ந்த பகுதிகளுக்கு செல்ல தேவையான படகுகள் ஆகியவற்றுடன் மேலும் மக்களின் உயிர்காக்க தேவையான மருத்துவ குழுவினரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.