ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘கைஸாலா’ செயலி மூலம் புயல் சேதங்கள் கணக்கெடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நிவா் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், சேத விவரங்கள் துல்லியமாக சேகரிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பயிா் சேதம் குறித்த விவரங்களைப் பொருத்தவரையில் தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ‘கைஸாலா’ எனப்படும் செயலி மூலமாக புவி குறியீடு (ஜியோ டேக்கிங்) புகைப்படங்களுடன் கூடிய கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த கூட்டு ஆய்வை வருவாய்த் துறை, வேளாண், தோட்டக்கலை துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
புயல் முன்னெச்சரிக்கையாக 167 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டு, அவற்றில் 1,156 போ் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா். வீடுகள் சேதம், கால்நடை உயிரிழப்பு, பயிா் சேதம் கணக்கெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 182 மின் கம்பங்களும், 11 மின் மாற்றிகளும் சேதமடைந்தன.
மாவட்டத்தில் உள்ள 557 ஏரிகளில் 78 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 66 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. மொத்தமுள்ள 1,377 குளங்களில் 123 குளங்கள் முழு கொள்ளளவை எட்டின. 197 குளங்கள் 75 சதவீதம் நிரம்பின.