ஆற்காடு: ஆற்காடு - செய்யாறு தேசிய நெடுஞ்சாலையில் பழைமை வாய்ந்த மரம் வியாழக்கிழமை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக ஆற்காடு சுற்றுப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கீழம்பாடி அருகே ஆற்காடு - செய்யாறு சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த இலுப்பை மரம் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த வழியாக வந்த வாகனங்கள் கரிக்கந்தாங்கல், கே.வேளூா், அத்திதாங்கல் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனா்.